ho Announcement அழியும் பூமியின் சாட்சி: “அந்தத் தவிட்டுக்குருவி இறந்து கொண்டிருந்தது”
Announcement

அழியும் பூமியின் சாட்சி: “அந்தத் தவிட்டுக்குருவி இறந்து கொண்டிருந்தது”

சுற்றுச்சூழல், பறவைகள், மற்றும் மனிதச் செயல்களின் விளைவுகளை கவலையுடனும் கரிசனத்துடனும் பதிவு செய்யும் கவிஞர் ஆசையின் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு.

Share
Share

இந்த உலகம் மனிதர்களுக்கேதானா?

கவிஞர் ஆசை எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகளை உயிர் பதிப்பகம் “அந்தத் தவிட்டுக்குருவி இறந்து கொண்டிருந்தது” என்கிற தலைப்பில் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளது. தமிழ்திசை நாளிதழில் வெவ்வேறு காலக்கட்டங்களில் இந்தக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. சுற்றுச்சூழல், பறவைகள் என இரண்டு பகுதிகளாகத் தொகுப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தவுலகம் நமக்கானது மட்டுமல்ல, மரங்களும் செடிகொடிகளும் பறவைகளும் கடல்வாழ் உயிரினங்களும் என ஒரு மாபெரும் சங்கிலிப்பிணைப்பு, ஏன் தன்னுடைய சுயநலத்திற்காக அவற்றை அழித்தொழிப்பதில் மனிதர்களுக்கு இத்தனை ஈடுபாடு என்பதை கவலையோடும் கரிசனத்தோடும் முன்வைக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.

நீரை போத்தலில் அடைத்து விற்பதற்கும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கும் என்ன தொடர்பு? நீரை உறிஞ்சுவதோடு மட்டுமல்லாமல் எவ்வாறு தொழிற்சாலைகள் நன்னீரை மென்மேலும் அசுத்தப்படுத்துகின்றன? இவற்றின் காரணமாக நிகழும் காலநிலை மாற்றங்களும் மனிதனால் சுரண்டுப்படுவதால் இயற்கையில் உண்டாகும் அழிவுகளும் என்ன? இவை அனைத்தும் மிக எளிமையான மொழியிலும் முக்கியமான தரவுகளோடும் ஆசையால் விளக்கிச் சொல்லப்படுகின்றன. மனிதர்களின் நடமாட்டம் பகற்பொழுதுகளில் மிகுந்துகொண்டே போவதால் எவ்வாறு சில விலங்குகள் இரவுகளிடம் தஞ்சம் புகுகின்றன, அதன்காரணமாக சூழலியலில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் பேசுகிறது தொகுப்பு.
சூழலியலுக்காகப் பாடுபட்ட ஆளுமைகள் குறித்த கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. மரங்களை வெட்டுவதற்கு எதிராக சிப்கோ இயக்கத்தை முன்னெடுத்த சுந்தர்லால் பகுகுணா பற்றியும் காட்டுயிர் களப்பணிகளில் ஈடுபட்டுள்ள யானைகளின் தோழி டி.என்.சி.வித்யா குறித்த அறிமுகங்களும் உள்ளன. எவ்வாறு தன்னையே அறியாமல் காந்தி ஒரு சிறந்த சூழலியாளராக இருந்தார் என்பதும் விரிவாக விளக்கப்படுகிறது. ஹோண்டூரஸ் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளியான பெர்த்தா காசிரீஸின் படுகொலை பற்றிய ஒரு கட்டுரையும் நூலில் உள்ளது. அணைகளைக் கட்டுவதற்காக பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரங்கள் சூறையாடுப்படுவதோடு அதை எதிர்த்துக் குரலெழுப்புபவர்கள் எவ்விதம் காணாமல் அடிக்கப்படுகிறார்கள் எனும் கொடூரமான உண்மையும் வாசிக்கும்போது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

தொகுப்பின் இரண்டாம் பகுதியில் உள்ள பறவைகளைப் பற்றிய கட்டுரைகளில் எழுத்தாளர் ஆசை பின்னுக்குச் சென்று கவிஞர் ஆசை முன்னால் வந்துவிடுகிறார். இன்னும் சரியாகச்சொன்னால் ஆசைக்குள் இன்னும் இருக்கும் ஒரு குழந்தை மனம் அந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறது. இந்த நூலை வாசித்து முடிக்கும்போது ஒருவித துயரமும் மனிதனின் பேராசை குறித்த வருத்தமுமே உள்ளுக்குள் உண்டாகுகின்றன. எத்தனையோ ஆண்டுகாலமாக ஜீவித்திருக்கும் ஒரு புவிக்கோள் நம் கண்முன்னே அழிந்துபடுகிறது. ஏதும் செய்யவியலாதவர்களாக நாம் வெறும் மௌனசாட்சிகளாக நின்றிருக்கிறோம்.
நீங்களாவது இந்த பூமியைக் காப்பாற்றுங்கள் என்று அடுத்த தலைமுறையிடம் உண்மையில் நாம் கையேந்த வேண்டும் என்கிற சூழல்தான் இங்கு நிலவுகிறது. தமிழகத்தின் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அனைத்திற்கும் கொண்டு சேர்க்கவேண்டிய முக்கியமான நூல் இது. அதற்கான முயற்சியை உயிர் பதிப்பகம் மேற்கொள்ளவேண்டும்.

அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது
சுற்றுச்சூழல் கட்டுரைகள்
ஆசை
உயிர் பதிப்பகம்
தொடர்புக்கு: 9840364783

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles
Announcement

களித்தான் – குறியீடுகளால் உயிர்ப்பெறும் சமகாலச் சிறுகதைகள்

ஹேமி கிருஷ் எழுத்தில் ஆசுவாசம், அபத்தம், தனிமை, மீறல் — படிமங்களாக மனதில் தங்கும் ஒன்பது...