ho Announcement களித்தான் – குறியீடுகளால் உயிர்ப்பெறும் சமகாலச் சிறுகதைகள்
Announcement

களித்தான் – குறியீடுகளால் உயிர்ப்பெறும் சமகாலச் சிறுகதைகள்

ஹேமி கிருஷ் எழுத்தில் ஆசுவாசம், அபத்தம், தனிமை, மீறல் — படிமங்களாக மனதில் தங்கும் ஒன்பது கதைகள் - கிருஷ்ண மூர்த்தி

Share
Share

களித்தான் – ஆசுவாசத்தின் எல்லைகளில் நிற்கும் மனிதர்கள்

கதைகள் குறியீடுகளாக, படிமங்களாக மனதில் தங்குகின்றன. இலக்கிய சிறுகதையில் வெறும் கதை எனும் அம்சத்தால் மட்டுமே இந்த படிமங்கள் சாத்தியப்படுவதில்லை. உள்ளாடும் உணர்ச்சிகளும், அதை வெளிப்படுத்தும் மொழியும் துணைபுரிகின்றன. செவ்வியல் எழுத்துகளில் இந்த நிலை எளிமையாக் எட்டப்படுகிறது. அனுபவச் செறிவும் அதனூடாக உருவாகும் வாழ்வியல் முரணும் அதை சாத்தியப்படுத்துகின்றன. சமகாலச் சிறுகதைகளுக்கு இவை சவாலான ஒன்றாகவே அமைகிறது. ஹேமி கிருஷ் – இன் எழுத்தில் வாசிக்கும் முதல் நூல் “களித்தான்”. ஒன்பது கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான கதைகள் படிமங்களாக மனதுள் தங்குகின்றன. சமீபத்திய வாசிப்பில் சிறந்ததொரு தொகுப்பு என்றும் குறிப்பிட விரும்புகிறேன்.
 
தொகுப்பு எனக்கு இரண்டாக பிரிந்திருப்பதாக தெரிந்தது. தொகுப்பின் முதல் நான்கு சிறுகதைகள் முழுமையை எட்டாததாகவும் மீத ஐந்து சிறுகதைகளும் அதை எட்டக்கூடியதாகவும் அமைந்திருந்தது. முதல் நான்கில் முக்கால் சதவிகித சிறுகதை சிறப்பாகவும் அதன் முடிவு மையக் கதாபாத்திரத்தின் சமரசமாகவும் அமைந்திருந்தது என் ரசனையின் அடிப்படையில் ஏற்புடையதாக அமையவில்லை. “குற்றம்”எனும் சிறுகதை பால்ய வயதில் அறியாமல் செய்யும் ஒரு செயல் பெரும் குற்றமாகிறது. பால்யம் – குற்றவுணர்ச்சி என்பது முரண்பாடான மனித உணர்வு. குற்றவுணர்ச்சியை வெளிப்படுத்த தெரியாமல் இருக்கும் பருவத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். மேலும் பால்யம் என்பதாலேயே வாழ்வின் வடுவாக மாறும் தருணங்களையும் சிறப்பாக படம்பிடிக்கிறார். குற்றவுணர்ச்சிக்கு எதிர்ப்பதம் மன்னிப்பு கேட்பதன் தைரியம். வயதாகி அந்த தைரியம் கிடைக்கும்போது மீண்டும் அதே சம்பவங்களின் இடத்திற்கு செல்கிறாள். அங்கு அவளுக்கு கிடைக்கும் காட்சியும் அனுபவங்களும் ஒரு ஆசுவாசம் எனும் இடத்தில் முடிவடைகிறது. குற்றவுணர்ச்சியின் தீவிர உரையாடலுக்கோ, மன்னிப்பின் ஆழமான வேட்கைக்கோ கதை நகரவில்லை. யதார்த்த வாழ்க்கையின் எல்லைகளை கதைகள் தாண்டாத போதிலும் ஒரு ஆசுவாசம் பால்யத்தில் ஏற்பட்ட வடுவை முற்றாக அழித்துவிடுமா எனும் கேள்வி பதிலற்று நின்றுவிடுகிறது. தொந்தரவு செய்யாத உணர்வுகளாக தொடக்கக் கதைகளின் மைய உணர்வு நீர்த்துவிடுகிறது.
 
மீத ஐந்து கதைகளும் ஆகச் சிறந்த புனைவின் வடிவமாக மேலெழுகின்றன. “காம்பவுண்ட் வீடு” எனும் சிறுகதை. திருமணமான பெண் வசிக்கும் ஒரு தெரு. கணவன் வளைகுடா நாட்டில் இருக்கிறான். அந்த வீட்டில் ஒரு தொலைக்காட்சி. அதை அந்த தெருவே பயன்படுத்துகிறது. அவள் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. அவளைப் பற்றி பெரிதாக அந்த தெருவில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. தொலைக்காட்சி மட்டுமே அவளுக்கும் சுற்றத்திற்குமான உறவாக அமைகிறது. அவளுடைய வாழ்க்கையின் சில ஆசைகளும், சில சங்கடங்களும் அந்த தெருவில் நிகழ்கிறது. அந்த மக்கள் தொலைக்காட்சியைப் பார்ப்பதுபோன்று வேடிக்கைப் பார்க்கின்றனர். கைவிடப்பட்ட நிலையில் திரியும் ஒரு பெண் கதாபாத்திரம் கதையில் வருகிறது. நாயகி மட்டுமே அவளுடன் தன்னுணர்வுகளை empathize செய்துகொள்கிறாள். இக்கதை மட்டுமின்றி அனைத்து கதைகளிலும் உதிரியாக வரும் கதாபாத்திரத்தின் மீது கரிசனம் கொள்ளும் நபராக மையக்கதாபாத்திரம் அமையும் ஒற்றுமையைக் காணமுடிகிறது. 
 
நாயகிக்கும் ஏற்படும் அசௌகரிய சூழலுக்கு குரல் கொடுக்க யாருமே இல்லாமல் ஆகிறது. அனைத்து பொருட்களுடன் காணாமல்போகும் நாளில் சுற்றம் அவள் மீது கரிசனம் கொள்கிறது. அது அவள் மீதாக அல்லாமல் தொலைக்காட்சியாக அமையும்போது சிறுகதை அதன் உச்ச கணத்தை எட்டுகிறது.
 
முந்தைய கதைக்கும் இக்கதைக்குமான வித்தியாசமாக சிறு அம்சம் மட்டுமே அமைகிறது. காம்பவுண்ட் வீடு சிறுகதையிலும் மையப்பாத்திரம் ஆசுவாசம் அடைகிறது. அது தனிப்பட்ட அம்சமான ஒன்று. அடுத்த சில வரிகளில் சுற்றத்தின் எதிர்வினையையும் பதிவு செய்யும்போது யதார்த்த வாழ்வின் அபத்த கணம் வெளிப்படுகிறது. தனிமனிதர்களிடம் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சமூகத்தின் அங்கமாக, அவர்களின் உணர்வுகள் பண்பாட்டு அதிர்வுகளாக மாறும் கணங்களை சிறந்த கதைகளின் முடிவுகள் எடுத்துரைக்கின்றன.

‘பற்றென்ப’ சிறுகதையில் இடம்பெறும் அடர் பச்சை நிற சேலை, ‘தனிமை’ சிறுகதையின் நாயகி கவனிக்கும் வாகனம் சரி செய்யும் ஒரு பட்டறை, ‘பிழை’ சிறுகதையில் அலட்சியத்தின் குறியீடாக மாறும் டைரி ஆகிய அம்சங்கள் நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்க வல்ல சிறுகதைகள். “தனிமை” சிறுகதை இருவேறு நிலங்களின் பண்பாட்டு சூழலை நுட்பமான விவரணைகளில் சிறப்பாக பேச முற்படுகின்றன. வீட்டில் தனித்திருக்கும் இந்தியப் பெண் பொழுதை கழிக்க வேடிக்கைப் பார்க்கிறாள். வீட்டின் முன் நிறுவப்படும் வாகனம் சரி செய்யும் ஒரு கடை, அதிலிருப்பவனின் பொழுதுகள், இசை என்று எல்லாவற்றையும் கவனிக்கிறாள். ஒரு நாள் அக்கடை நிர்மூலமாக்கப்படுகிறது. வேரூன்றி இருந்து பழ்க்கப்பட்ட இந்திய மனம் வேரற்று கிடக்கும் அமேரிக்க(மெக்ஸிக) மண்ணை அவதானிப்பதாக கதை ஊடாடுகிறது. மீள்வாசிப்பில் அவளது வேடிக்கை இருவேறு பண்பாட்டின் உரையாடலாக பரிணமிக்கிறது. மேலும் பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் மீறலின் தேவையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். சுயநலத்திற்காக சில இடஙளிலும் சுயஅங்கீகாரத்திற்காக சில இடங்களிலும் இயல்பாக அந்த மீறல் இடம்பெறுகிறது.


சிறுகதைத் தொகுப்பின் கடைசி சிறுகதையான “கூழாங்கல்” அனைத்து அம்சங்களிலும் தன் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இக்கதையை விரிவாக பேசவே விரும்புகிறேன். சமகால இலக்கியத்தில் சிறந்த பத்து கதைகளை தேர்ந்தெடுத்தால் இக்கதை நிச்சயம் இடம்பெறும்.


ஹேமி கிருஷ் தவறவிடக்கூடாத எழுத்தாளராக மனதில் பதிந்திருக்கிறார்.

கிருஷ்ண மூர்த்தி


களித்தான் | ஹேமி கிருஷ் | சிறுகதைகள் | தமிழ்வெளி

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles
Announcement

அழியும் பூமியின் சாட்சி: “அந்தத் தவிட்டுக்குருவி இறந்து கொண்டிருந்தது”

சுற்றுச்சூழல், பறவைகள், மற்றும் மனிதச் செயல்களின் விளைவுகளை கவலையுடனும் கரிசனத்துடனும் பதிவு செய்யும் கவிஞர் ஆசையின்...