ho Announcement அனாகத நாதம் – மனங்களை அதிரச் செய்யும் மௌன இசை
Announcement

அனாகத நாதம் – மனங்களை அதிரச் செய்யும் மௌன இசை

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more and more and more

Share
Share

ஆர்.வத்சலா, கோயம்புத்தூர்.

திரு.செந்தில் ஜெகன்நாதன் அவர்களின் “அனாகத நாதம்” கதைத் தொகுப்பை சமீபத்தில் வாசித்து முடித்தேன்.
“அனாகத நாதம்” என்ற வார்த்தையே எனக்கு புதிதான ஒன்றாக இருந்தது. என்னை ஈர்த்த இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தேடினேன். “இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம்” என்ற பொருளை அறிந்தேன். இந்த வித்தியாசமான தலைப்பிற்காகவே ஒரு தனி பாராட்டு ஆசிரியருக்கு. முதலில், இந்தக் கதையையே வாசித்தேன்.. இத்துணை நாட்களும் வாழ்வில் எத்தனையோ முறை செம்பருத்தி பூக்களை நிறம் காரணமாக ரசித்துக் கடந்திருக்கிறேன். ஆனால் இக்கதையை வாசித்த பின்பு செம்பருத்திப் பூக்களை மிகுந்த மரியாதையோடு பார்க்கவும் அவை வாசிக்கும் அனாகத நாதத்தை மானசீகமாய் ரசிக்கவும் செய்கிறேன். எழுத்தாளரின் இந்த செம்பருத்தி பற்றிய ஒப்பீட்டு விவரணை அவ்வளவு அருமை.

நாதஸ்வர வாசிப்பைப் பற்றிய நல்ல புரிதலோடு கதை நகர்கிறது. “என்னால முடியலியே” என்ற சாமிநாதனின் பரிதவிப்பு என்னையும் தொற்றிக்கொள்ள மனதை என்னவோ பாரம் அழுத்தியது. பிறந்த குழந்தையை தூக்கும் தகப்பனென நாதஸ்வரத்தை தூக்கிய அவன் கைகள் இறுதிவரை வாசிப்பை நிறுத்தாமல் அருவியாய் நாதம் பொழிந்து வழிய இவ்வளவு திறமை இவனுக்குள் எங்கே ஒளிந்திருந்தது என்று எண்ணி வியக்கும்படியாகவும் இருந்தது… ஒரு ஆசிரியையாக எனக்கு சாமிநாதனுக்கு அமைந்த கலையாசிரிய வித்வான்கள் அவனுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் யுக்தியை அறிந்திருக்கவில்லையே… மாறாக அவனை குறைத்துப்பேசி லாயக்கற்றவனாக ஒதுக்கி விட்டார்களே?! மாணவர்களின் திறமையை ஆசிரியர்களல்லவா சகல முயற்சிகளும் செய்து அவர்களது ஆர்வம் குன்றாமல் மேம்படுத்தி திறமையை வெளிக்கொணர உதவிகரமாய் இருக்க வேண்டும் என ஆதங்கப்பட வைத்தது. அதனால் தானே சாமிநாதனுக்கு அவ்வளவு மன உளைச்சல்.. ஆனால் ஏதோ ஒரு உணர்வு உந்தித்தள்ள நாதஸ்வரத்தை கையிலெடுத்து கண்ணை மூடி வாசிக்க ஆரம்பித்தவன்… ஆஹா… மீதியை வாசகர்கள் படித்தே அனுபவிக்க வேண்டும்.. கதையை வாசித்து முடித்தவுடன் பெரிய பாரம் இறங்கியதாய் உணர்ந்தேன்..
அத்துணை நிம்மதி… நிறைவு.

“போகன் வில்லா” ,”தம்பொருள்”, மற்றும் “விடம்” ஆகிய கதைகளில் பெண்களின் மன உணர்வினை அவர்கள் நிலையிலிருந்து எழுதியிருந்தது மிகவும் பிடித்திருந்தது.. உறவைப் பேணும் சூத்திரத்தை கற்றுத் தந்திருந்தார்… வார்த்தைகளை தானுமே கவனத்துடன் கையாண்டிருந்தார்.
எல்லாக் கதைகளைப் பற்றிய என் அனுபவத்தை ஒரு வாசகியாக சொல்லிவிட விருப்பம்தான் எனினும் …வாசகர்கள் அவர்களாக வாசித்து சொந்த அனுபவத்தை அனுபவிக்க விட்டுவிட எண்ணி இன்னும் ஒரே ஒரு கதையைப் பற்றி மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.


“சாயை” என்ற கதையில் கதாநாயகர்களாக எனக்கு காக்கைகளே தோன்றின.. மக்களோடு அன்றாடம் பயணிக்கும் பறவைகளான காக்கைகளை வித்தியாசமான கதைக் கருவோடு எழுத்தாளர் அணுகியிருந்தது ஆச்சரியமளிக்கிறது. இக்கதையோடு எனக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டதற்கு இன்னொரு காரணம் நான் 21 வருடங்கள் காக்கைகளுக்கு காலையில் உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தேன்.. ஏதாவது சில நாட்கள் தாமதமாகி விடுவதுண்டு. அப்படியான ஒருசில சமயங்களில் காக்கைகளில் ஒன்று, வீட்டு வாசல்படிக்கே வந்தமர்ந்து கரையும்… “இரு வருகிறேன்” எனக் கூறிய படி மொட்டை மாடிக்கு வேகமாக உணவோடு செல்கையில் கூடவே தாவித்தாவி அந்தக் காக்கையும் வரும்… உணவை வைத்ததும் பதட்டமின்றி பழக்கப்பட்ட பாணியில் உணவையும் உண்டு எடுத்தும் செல்லும்… இப்போது இக்கதையை படிக்கையில் அந்த காக்கை, காலம் சென்ற என் இளைய மகனோ என எண்ணும் படியான நெகிழ்வான ஒரு நெருக்கம் இக்கதையோடு எனக்கு உண்டானது மறக்க இயலாத ஒரு பேரனுபவம்.


இப்படி ஒவ்வொரு கதையும் யாராவது ஒரு வாசகருக்கு அவரவர் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும் அனுபவம் ஏற்படலாம். திரு.செந்தில் ஜெகன்நாதன் அவர்கள் சாமானிய மக்களின் மன ஓட்டத்தை, பிரச்சனைகளை, நிகழ்வுகளை, இவற்றையெல்லாம் அவர்கள் அணுகும் விதத்தை எதிர்கொள்ளும் சங்கடங்களை அருகிலிருந்து பார்த்தது போல உணர்ந்து எழுதும் அவருடைய தனித்துவமான ஆற்றலே இதற்கு காரணமாக இருக்கும். மொத்தத்தில் வெகு அருமையான படைப்பாக இத்தொகுப்பை நான் உணர்கிறேன்.இவரது எழுத்துக்களை மிக எளிமையாக உள்வாங்கி விளங்கிக் கொள்ள இயலும். அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடியவை. புதுப் புது பரிமாணங்களில் ஆழமான புரிதல்களோடு கூடிய கதைகளை எழுதும் திறன் கொண்டவர் திரு.செந்தில் ஜெகன்நாதன் அவர்கள் என்றால், அது மிகையல்ல.


நூலைப் பெறுவதற்கு – சொற்றுணை பதிப்பகம் – 9790030749


ஆர்.வத்சலா,
கோயம்புத்தூர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles
Announcement

களித்தான் – குறியீடுகளால் உயிர்ப்பெறும் சமகாலச் சிறுகதைகள்

ஹேமி கிருஷ் எழுத்தில் ஆசுவாசம், அபத்தம், தனிமை, மீறல் — படிமங்களாக மனதில் தங்கும் ஒன்பது...

Announcement

அழியும் பூமியின் சாட்சி: “அந்தத் தவிட்டுக்குருவி இறந்து கொண்டிருந்தது”

சுற்றுச்சூழல், பறவைகள், மற்றும் மனிதச் செயல்களின் விளைவுகளை கவலையுடனும் கரிசனத்துடனும் பதிவு செய்யும் கவிஞர் ஆசையின்...